பல்லும் இல்லாத பவரும் இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது: ஸ்டாலின் பளிச்

தமிழ்நாடு லோக் அயுக்தா – தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவினை அமைப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அனுப்பி இருந்த கடிதத்திற்கு பதிலளித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின்  தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, “பெயர்ப் பட்டியலை” தயார் செய்யும் பொருட்டு, தேடுதல் குழு ஒன்றை அமைப்பதற்காக 28.12.2018 அன்று நடைபெறும் கூட்டத்திற்கு லோக் ஆயுக்தா அமைப்பின் “தேர்வுக்குழு”  உறுப்பினர் என்ற அடிப்படையில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அறிந்தேன்.

தமிழக அரசின் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பிற்கு, ஊழல் புகார்கள் மீது பொதுநலனுக்குப் பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த அமைப்பிற்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் முதலமைச்சர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழு, ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைவராக இடம்பெறும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இல்லை. லோக் ஆயுக்தா தலைவராக அதிகாரி ஒருவரை நியமிக்கும் வகையில் உள்ள சட்டப்பிரிவால் இந்த அமைப்பு “அதிகாரிகள் தலைமை தாங்கும்” அமைப்பாக உருமாற்றப்படும் அபாயம் உள்ளது. ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு துணைச் செயலாளர் தலைமையில் “விசாரணைக்குழு” என்பது வலுவற்றது மட்டுமின்றி வெறும் கண்துடைப்பு! ஊழல் புகார்கள் மீது யாரும் செல்வாக்கு பிரயோகித்திட இயலாதபடி, கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக இருப்பதற்குப் பதில், அரசுக்கு வெறும் பரிந்துரை செய்யும் “அஞ்சல் நிலையம் “ போன்ற அமைப்பாகவே லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஊழல் பற்றி தகவல் கொடுப்போருக்கு எவ்வித பாதுகாப்பும்சட்டத்தில் இல்லாததால், புகார்கள் கொடுக்கவே எவரும் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் வழக்குகளை “புலனாய்வு” செய்யும் குழுவோ, “நீதிமன்றங்களில் வழக்கை நடத்தும் குழுவோ” இந்த லோக் ஆயுக்தாவில் இல்லை. அனைத்திற்கும் மேல் அரசு ஒப்பந்தங்கள், டெண்டர்கள், நியமனங்களில் ஊழல்கள், உள்ளாட்சித் துறையில் ஊரறிய நடைபெறும் வெளிப்படையான ஊழல்கள் போன்றவற்றை விசாரிக்கக் கூடாது என்ற லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு, விசாரணையின் நகங்களைப் பிடுங்கி, ஊழல் ஒழிப்பு என்ற அடிப்படை நோக்கத்தையும் தீவிரத்தையும் பாழ்படுத்தியிருக்கிறது. மேலும், உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா விதிகளில் ஊழல் புகார்கள் குறித்து “ரகசிய விசாரணை” நடைபெறும் என்று, “வெளிப்படைத்தன்மைக்கு விலங்கிட்டிருப்பது” இந்த அமைப்பை உருவாக்க நாடாளுமன்றமும், உச்சநீதிமன்றமும் வரையறுத்த அடிப்படையையே தகர்த்தெறிந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு “பல்லும் இல்லாத, பவரும் இல்லாத” , அச்சடித்த பதுமை போன்று அசையமுடியாத செயலற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, உள்நோக்கங்களுடன் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளீடற்ற, வலிமைற்ற, வெறும் தக்கை போன்ற இப்படியொரு லோக் ஆயுக்தா அமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அறிமுகமான அன்றே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மிக மோசமான இத்தகைய குறைபாடுகளை எல்லாம் விரிவாக மேற்கோள் காட்டி, தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை, தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கையை சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் நிராகரித்துவிட்டு,அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள் ஏதும் ஊழல் ஒழிப்பிற்கும் உதவாமல், வெளிப்படையான விசாரணை நடைமுறைக்கும் வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு அதிமுக அரசின் “கூண்டுக்கிளி” போல்ஆக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பு ஒருபுறமிருக்க, அந்த அமைப்பிற்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தலைவர் பதவியில் ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சரும், அரசியல் சட்டப்படி நடுநிலையுடன் நியாயமாகச் செயல்படுவதை அறவே மறந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படும் பேரவைத்தலைவர் உறுப்பினராகவும் இடம்பெற்றுள்ள லோக் ஆயுக்தாவின் “தேர்வுக் குழு” கூட்டத்தில் பங்கேற்பது எவ்விதத்திலும் ஊழல் ஒழிப்பிற்கு உதவாது என்பதால், தாங்கள் 28.12.2018 அன்று கூட்டியிருக்கும் தேர்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.