திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்

“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை” முன்னிட்டு, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன், கலைஞர் படத்திற்கும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், பல்வேறு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், கலைஞரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அத்துடன் புதுக்கோட்டை “அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க”த்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டப், பாய், வேட்டி, புடவை, பால்பவுடர், தலைவர் படம் பொறித்த 2019 காலண்டர், மிளகா, பருப்பு உள்ளிட்ட சமையலுக்கான மளிகை
பொருட்கள் மற்றும் தையல் இயந்திரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

ரெ.தங்கம் தலைமையிலான தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தைச் சார்ந்த 40 மாற்றுத் திறனாளிகளுக்கு வேட்டி, புடவை, இனிப்பு மற்றும் ஒரு மூன்று சக்கர சைக்கிளை ஸ்டாலின் வழங்கினார்.

எஸ்.எஸ்.ஜோதி தலைமையிலான திராவிட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த 40 பேருக்கு, கண் கண்ணாடி, ஹாட்பேக், ஒரு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும்; நா.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களுக்கு “பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் குச்சி”யையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

அதுபோது தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, கு.க.செல்வம், எம்.எல்.ஏ., பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.