மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்சினை: சுமூகத் தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் நிறுவன பணியாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து சுமூகத் தீர்வு காணுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக  செயல்பட்டதாக கூறி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் தெழிற்சங்க நிர்வாகிகள் 8 பேர் கடந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம்  செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் 250க்கும் மேற்பட்ட மெட்ரோ ஊழியர்கள் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாரிமுனையில் தொழிலாளர் நலத்துறை உதவு ஆணையர் ஜானகிராமனுடன், மெட்ரோ நிர்வாக தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தரப்பினரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மெட்ரோ ஊழியர்கள் சார்பில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் பேச்சுவார்தையில் பங்கேற்றார்.

மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

இதனால், வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  75 சதவீதம் ஒப்பந்த ஊழியர்களை வைத்து தற்போது ரயில்கள் எந்த தடங்கலும் இன்றி இயங்கி வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணியாளர்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் சுமூகத் தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.