அட களவாணிப் பயலுகளா…!: வைரலாகும் ஸ்டாலின் பேச்சு…

உன்னைப் போன்றவர்களையும் மேடையில் பேசவைத்த திராவிட மண் இது என்று, அரசியல் எதிரிகளை திமுக செயல் தலைவர் ஒருமையில் சாடியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதன் அரசியல் எதிரிகள் கடுமையாக சாடி வருவது வாடிக்கையானதுதான். அதிலும், நேரடி எதிரியான அதிமுகவை விடவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே,  அவர்களது ஜால்ராக்கள் கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்த காட்சிகள் தமிழக அரசியல் அரங்கில் அன்றாடம் அரங்கேறி வந்தன. கருணாநிதி முதுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், ஜெயலலிதா காலத்தில் அவரை கண்டபடி ஏசி அரசியல் பிழைப்பு நடத்தி வந்த சிலர், தற்போது அதே பாணியில் ஸ்டாலினைத் திட்டவும், விமர்சிக்கவும் தொடங்கி உள்ளனர். அப்படிப் பேசும் போது, கழகங்கள் இல்லாத தமிழகம் என்று  அவ்வப்போது கூறுவதும் வாடிக்கையாகி விட்டது. பாஜகவைச் சேர்ந்த சிலர் மட்டுமின்றி, தமிழ் மற்றும் தமிழர்கள் பெயரால் கட்சி தொடங்கி நடத்தி வரும் “செந்தமிழர்களும்” பார்ப்பனர்களின் அடி வருடும் இந்தச் சேவையை ஓய்வின்றி செய்து வருகின்றனர். இதற்கு திமுக செயல்தலைவர் தக்க பதிலடி கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் அக்கட்சியினரிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அவரது இயல்புக்கு மாறாக திராவிட இயக்கத்திற்கு எதிராக பேசுவோரைக் கடுமையாக சாடிப் பேசியுள்ளார். “அட களவாணிப் பயலுகளா…” என்று அவர்களை விளித்து.. உன்னைப் போன்ற….யெல்லாம் மேடையில் நின்று பேச வைத்த திராவிட மண் இது என்பதை மறந்து விடாதே…” என்று அனலைக் கக்கியுள்ளார். அவரது இந்தப் பேச்சு திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வைரலாகவும் பரப்பப்பட்டு வருகிறது. “நாங்களும் எவ்வளவுநாள் தான் இவனுக பேசுறத கேட்டுக்கிட்டு பொறுமையா இருக்கிறது… அதான் தளபதி பொங்கி வெடிச்சுட்டாரு” என்கின்றனர் உடன்பிறப்புகள். “இருந்தாலும், அவருக்கென்று ஒரு தகுதியும் இமேஜும் இருக்கிறது. அதையும் தவற விட்டுவிடக் கூடாது” என்ற கவலையையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

M.K.Stalin’s hot Speech