“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வில்லில் இருந்து விடுபட்ட கணையாகக் களமிறங்கி – விண்ணிலிருந்து ஒளிவிடும் கதிராக வெளிச்சம் பாய்ச்ச, கலைஞரின் உடன்பிறப்புகளாம் கழகத் தோழர்கள் ஆயத்தமாகி விட்டனர். எங்கு சென்றாலும் எப்போது தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்புதான் அவர்களிடம் தெரிகிறது. கழகத்தினரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல இது! தமிழ்நாட்டு மக்களின் இரண்டாண்டு கால எதிர்பார்ப்பும் இதுதான். எங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியை விரட்ட மாட்டீர்களா என நேரடியாகவே கேட்கிறார்கள். இன்னும் விரட்டவில்லையே என்று நம் மீது கோபம் கொள்கிறார்கள். ஆட்சிமாற்றம் நிச்சயம். அது ஜனநாயக வழியில் நடைபெற வேண்டும் என்பதே நமது இலட்சியம். அதனை உறுதி செய்யும் வகையில்தான் கரூர் – திருமாநிலையூரில் கழகத்தின் நிலைத்த வெற்றியைப் பறைசாற்றும் வகையில் நேற்று மக்கள் கடல் அலை அலையாய்த் திரண்டு இருந்தது. கழகத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் அருமை சகோதரர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் தாய் வீடு திரும்பிய அவர்களை, வரவேற்றதோடு – அந்த மாபெரும் நிகழ்ச்சியும், மாநாடு போல் திரண்ட கூட்டமும் ஏற்படுத்திய மலைப்பில் இருந்து இன்னமும் என்னால் விடுபட முடியவில்லை. இந்நிகழ்ச்சிக்கு அரும்பாடுபட்ட அருமை சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், அவருடன் தாய்க் கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களும் – பாராட்டுக்களும். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு, கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, கே.சி.பழனிசாமி, கழக விவசாய அணிச் செயலாளர் சின்னச்சாமி போன்ற கழக முன்னோடிகள், இப்படி எல்லோரும் ஒருங்கிணைந்திருந்த மேடையில் இருந்து பார்த்தபோது “படை பெருத்ததால் பார் சிறுத்ததோ, பார் சிறுத்ததால் படை பெருத்ததோ” என வியக்கும் அளவிற்கு வெள்ளம்… வெள்ளம்…. எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். கரூர் மாவட்டத்திற்குள் நுழையும் பொழுதே அன்பும், ஆரவாரமும் பெருக்கெடுக்க கழகத்தினரும், பொதுமக்களும் திரண்டு நின்று அளித்த வரவேற்பு கரூர் மாவட்டத்தில் இருந்து புறப்படும் வரை ஓயாமல் தொடர்ந்தது, உள்ளத்திற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

கூடிக் கலைவதல்ல, தி.மு.கழகத்தின் பெரும் சேனை. தமிழக மக்களின் துயரக் கண்ணீரைத் துடைப்பதற்கு எங்களின் கரங்கள் எப்போதும் தயாராக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது கழகம். கரூர் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற அடாவடிச் செயலை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு கழகம் என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்ற உறுதியைத் தெரிவித்ததோடு, இந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி உரிய தீர்வை பெறுவதற்கு முயற்சிப்போம் என்கிற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளேன். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக ஜனநாயகத்தின் எஜமானர்களாம் பொதுமக்களை வீடு வீடாக – வீதி வீதியாக – ஊர் ஊராக சந்திப்பது என்று கடந்த 24-12-2018 அன்று கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மக்களைச் சந்திப்பது என்பது தி.மு.கழகத்திற்குப் புதிய அணுகுமுறையன்று. ஏனெனில், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைத் தேடிப் போகிறவர்கள் அல்ல நாம்! வென்றாலும் மக்கள் நலன் அறிந்து திட்டங்களைத் தீட்டுவோம். தோற்றாலும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம்.

“தம்பி… மக்களிடம் செல். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். மக்களுக்காகப் பணியாற்று” என்ற ஜனநாயக நெறியை நமக்கு வகுத்தளித்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணனின் அன்புத் தம்பியாம் நம் அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள் தன் 95 வயது வரை மக்களுக்காகவே சிந்தித்தவர். அவர்களை சந்தித்தவர். அவர்களுக்காகவே பாடுபட்டவர்.

அண்ணாவும், கலைஞரும் அறிவாலயத்தின் வாயிலில் சிலையாக மட்டுமல்ல, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலையாக இருக்கிறார்கள். அவர்கள் வகுத்து தந்த பாதையில் – உருவாக்கிய தடத்தில் நம் கால்கள் நடைபோடுகின்றன. உறுதியாகச் சொல்லலாம், நமது பயணம், வெற்றிப் பயணம். ஊழல் மலிந்த உலுத்தர்களின் ஆட்சிக்கு எதிராகத் தொடங்குகின்ற ஜனநாயகப் போர் இது!

மத்தியில் ஆட்சி செய்கிற பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும் – மாநிலத்தை ஆளுகின்ற மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் திரண்டிருக்கும் மக்கள் படையை ஒருங்கிணைக்கும் பணியே நம்முடைய களப்பணி.

‘நீட்’ தேர்வில் தொடங்கி, நீர்ஆதாரம் – நிதிஆதாரம் எல்லாவற்றிலும் வஞ்சகம் செய்கிறது பாசிச பா.ஜ.க. அரசு. இயற்கையின் பெருஞ்சீற்றமான கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்குக்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அதற்குரிய நிவாரண நிதியை அளிப்பதில்கூட வேகமில்லை. கஜா மட்டுமா? இதற்கு முன் தமிழ்நாட்டைத் தாக்கிய வர்தா புயல், ஒக்கிப் புயல் நேரங்களிலும் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு எப்படி இருந்தது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் அறிவார்கள். தாமரை மலர வாய்ப்பில்லாத மாநிலம் சேற்றில் அமிழ்ந்து போகட்டும் என்பதுபோல பாசிச பா.ஜ.க. ஆட்சி வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

அதனைத் தட்டிக் கேட்க வேண்டிய மாநில ஆட்சியாளர்கள் டெல்லி நோக்கி மண்டியிட்டு தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. அரசு காலால் இடும் கட்டளைகளைத் தலையில் சுமந்து நிறைவேற்றும் கொத்தடிமைகள் கூட்டமாக இருக்கிறது மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு. எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் என்கிற ‘கொள்ளை’ ஒன்றே இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மிச்சமிருக்கும் அதிகார நாட்கள் அனைத்தையும் வருமான நாட்களாக மாற்றுவதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்வதில்லை. முதலமைச்சரில் தொடங்கி அத்தனை அமைச்சர்களும் ஊழல் மலிந்த உளுத்தர்களாக இருக்கிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்கள் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நிவாரணம் கேட்டுத் தவிக்கிறார்கள். போராட்டங்களும், சாலை மறியல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய அரசாங்கம், இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடுவோரை வலிய இழுத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டு போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்டு – குறி பார்த்து நடைபெற்ற கொலை வெறித் தாக்குதல் என்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகள் புட்டுப் புட்டு வைக்கின்றன. தலையை நோக்கி குறிவைத்து, மண்டையோட்டை சிதறடித்து, நெஞ்சுப் பகுதியில் தோட்டாவால் துளைத்து, பின்னங்கழுத்தைப் பிளக்கச் செய்து என பல வகையிலும் குறிவைத்து மக்களை நரவேட்டை ஆடியிருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

எந்த மக்களால் ஆட்சியில் உட்கார வைக்கப்பட்டார்களோ அந்த மக்களையே வேட்டையாடும் கொடூரத்தனத்தை வீழ்த்திட – அதனை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் சேடிஸ்ட் தனமான மத்திய அரசின் மறைமுக சதிகளை அம்பலப்படுத்திட மக்களிடம் செல்கிறது கழகம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிதான் இது. அதற்காக ஊராட்சிகள் தோறும் செல்கிறோம். ஏனென்றால், இன்னமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வக்கற்ற அரசாக இருக்கிறது அ.தி.மு.க. அரசு.

ஜனநாயகத்தின் ஆணிவேர் என்பவை உள்ளாட்சி அமைப்புகள். அவை வலிமையாக இருந்தால்தான், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். அந்த அதிகாரத்தை வழங்க மறுக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், மாநிலத்திற்குரிய அதிகாரத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்து வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கையால் மதவெறி நெருப்புக்கு எண்ணெய் வார்த்து, இன்னொரு கையால் மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசோ, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களைத் தங்களின் அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே ஜனநாயகத்தை முடக்கிப் போடுகின்ற கொடுஞ்செயல். இவற்றிலிருந்து நாடும் – நாமும் மீள்வதற்கான தொடக்க நாள்தான்,

2019 ஜனவரி 8.

“மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற முப்பெரும் முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2019 ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17-ஆம் தேதி வரை “ஊராட்சி சபைக் கூட்டம்’‘ நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கருத்துகளைப் பரப்புவது வழக்கம். கழகத்தின் பொதுக்கூட்டங்கள், மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் எனப் பெயர் பெற்றவை. அத்தகைய பொதுக்கூட்டங்களுக்கு கழகத் தொண்டர்கள், தோழமைக் கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு வருவார்கள். எனினும், பொதுமக்கள் அந்தக் கருத்துகளைக் கேட்க வேண்டுமென்றால், அவர்களைப் பொதுக்கூட்டத்திற்கு வரவழைப்பதை விடவும் அவர்களை நோக்கி தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் வழங்குவது போன்ற வியூகங்களே மிகுந்த பலன் தரக்கூடியவை. மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குபவை. அந்த அடிப்படையில்தான், ஊராட்சிகள் தோறும் மக்கள் பங்கேற்புடன் கூட்டம் நடத்துகிறது கழகம்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வாழ்ந்த மண் – வளர்ந்த மண் – அவர் நின்ற தொகுதி – மகத்தான முறையிலே வென்ற தொகுதி என அத்தனை சிறப்புகளும் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 8-ஆம் நாளன்று உங்களில் ஒருவனான நான், ஊராட்சி சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன். அதே நாளில், கழகப் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த பெருமைக்குரிய ஈரோடு மாவட்டத்திலும், கழக முதன்மைச் செயலாளர் நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த திருவிடமான காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள்.

மூன்று மாவட்டங்களைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் தலைமைக் கழகத்தின் சார்பில் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியின் பெயர், அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தலைமைக் கழகப் பிரதிநிதிகளின் விவரம், தேதி, நேரம் அனைத்தும் அடங்கிய அறிவிப்பினை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் வெளியிட உள்ளார்கள்.

அதனடிப்படையில் உள்ளாட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இளைஞர்கள், பெண்கள், இன்னல்படும் மக்கள் அனைவரின் பங்கேற்பும் நிறைந்ததாக இந்த ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களின் மாவட்ட -ஒன்றிய – ஊராட்சி நிர்வாகிகளை அழைத்து ஜனவரி 8, 2019-க்கு முன்பாக கூட்டம் நடத்தி, ஊராட்சிப் பயணத்தின் நோக்கங்களையும் செயல்முறைகளையும் விளக்கிட வேண்டும். அத்துடன், பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலையும் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

ஒன்றியச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் தமது ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் செவ்வனே நடைபெற உதவி செய்வதோடு, கூட்டம் குறித்த தகவல்களை மாவட்டத் தலைமைக்கு அனுப்பிட வேண்டும். நாளுக்கு நாள் கூட்டம் குறித்த மொத்த தகவல்களைக் கழகத் தலைமைக்கு அனுப்புவதை மாவட்டக் கழகச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட கழகக் கொடிக்கம்பங்களில் புதுக் கொடி ஏற்றுதல், இதுவரை கொடியேற்றப்படாத ஊராட்சிகளில் கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிடும் வகையில் இருவண்ணக் கொடி ஏற்றப்படல் வேண்டும்.

ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி மரத்தடி, சந்தை, கலையரங்கம், பொதுத்திடல், பள்ளி வளாகம் என அனுமதிக்கப்படும் இடங்களில் இருநூறுக்கும் குறைவில்லாத பொதுமக்கள் – கழகத்தினர் பங்கேற்கும் வகையில் ஊராட்சி சபைக் கூட்டங்களை ஊராட்சி செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஊராட்சிகள் தோறும் சென்று பேசக்கூடிய தலைமைக் கழக பிரதிநிதிகளின் பட்டியல் தயாராக உள்ளது. அது குறித்து, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தங்களுக்கான ஊராட்சிகளையும் கூட்டம் நடத்தப்படும் தேதிகளையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேச்சாளரும் ஊராட்சி செயலாளர்களின் இல்லத்திற்குச் சென்று நலன் விசாரித்து, அங்கு ஊராட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், கழகத்தின் மூத்த நிர்வாகிகள் ஆகியோரிடம் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.

தலைமைக் கழக பிரதிநிதிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம், உங்களில் ஒருவனான என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மேலான கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.

கழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழனும் நம் உடன்பிறப்பு. உடன்பிறப்புகள் எல்லோரும் தமிழினத்தின் உரிமைக்காக ஓயாது உழைப்பவர்கள். அந்த வகையில்தான், டால்மியாபுரம் என்கிற வடமொழி பெயரை நீக்கி கல்லக்குடி என்ற தமிழ்ப்பெயர் சூட்டிட தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து போராட்டம் நடத்தி, சிறை தண்டனை பெற்ற தலைவர் கலைஞர் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட, கழகத்தின் முதுபெரும் தொண்டர் பூவாளூரைச் சேர்ந்த செபஸ்தியார் (எ) ராசு அவர்களின் குடும்பச் சூழலை அறிய நேர்ந்ததால், தலைவர் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் நிதியாக அளித்து அந்த முதுபெரும் தொண்டரின் குடும்பத்திற்கு பக்கபலமாக கழகம் நிற்பதை உறுதி செய்தேன். விலைமதிப்பில்லா தியாகங்கள் புரிந்த இப்படி எத்தனையோ பேர் ஒவ்வொரு ஊராட்சியிலும் இருப்பார்கள். அவர்களையும் தேடிச் சென்று ஆலோசனைகளை பெற்றிட வேண்டும்.

தவிர்க்க இயலாத காரணத்தால், தலைமைக் கழக பிரதிநிதிகளின் பயணம் ரத்தாகும் சூழல் உருவானால், அதுகுறித்து மாவட்டக் கழகச் செயலாளரிடம் முன்கூட்டியே தெரிவித்திடல் அவசியம்.

கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டங்களை நிறைவு செய்வதில் முழு கவனம் செலுத்தி, அதன்பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிற ஊராட்சிகளில் கூட்டம் நடத்திடல் வேண்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை ஒட்டி, ஜனவரி 13 முதல் 18 வரை கூட்டங்களுக்கு இடைவெளிவிட்டு, 19ஆம் தேதியிலிருந்து தொடர வேண்டும்.

நமது ஒரே இலக்கு, ஆட்சி மாற்றம், அதுவே மக்களின் விருப்பம். அதற்கேற்ப, ஒவ்வொரு ஊராட்சியாக மக்களிடம் நேரில் செல்வோம். பாசிச பா.ஜ.க. – மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிகளின் அவலங்களை மக்களிடம் சொல்வோம். நம்மைவிட அதிகமான அவலங்களை அறிந்திருக்கும் அவர்கள் சொல்வதையும் கேட்போம். மத்திய – மாநில அரசுகளின் நிர்வாகத் தோல்விகளை மக்கள் முன் பட்டியலிடுவீர். அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அவர்கள் அளித்த ஏமாற்று வாக்குறுதிகளையும் – தொகுதி மேம்பாட்டு நிதியை வீணடித்ததையும் எடுத்துரைப்பீர்.

தலைமைக் கழகம் தயாரித்துத் தரும் துண்டறிக்கைகளை மக்களிடம் வழங்குவோம். கனி தரும் மரமாக – குளிர் தரும் நிழலாக விளங்கிய தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியின் சாதனைகளையும் – பாலைவனமாய் தமிழ்நாட்டையும் பயங்கரவாத நிலமாக இந்தியாவையும் மாற்றத் துடிக்கும் இன்றைய ஆட்சிகளின் வேதனையையும் எடுத்துரைப்போம்.

‘உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம்’ என்ற உறுதியினை வழங்கி, நம்பிக்கையைப் பலப்படுத்தி மக்களின் மனங்களை வெல்வோம். ஊராட்சிகள் தோறும் மக்களின் மனங்களில் விதைக்கப்படும் விதை, உள்ளாட்சி – சட்டமன்றம் – நாடாளுமன்றம் என அனைத்து ஜனநாயகக் கழனிகளிலும் விளையும். உலுத்தர்களின் ஆட்சி விரட்டப்பட்டு நல்லாட்சி மலரும்!

செல்வோம்… சொல்வோம்…. வெல்வோம்!

இவ்வாறு ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.