மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

மேலும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினந்தோறும் நடைபெறும் என்றும், மே 4-ம் தேதியன்று காலை 9 .05 மணி முதல் 9.29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரியப் பாதுகாப்புடன் திருக்கல்யாண சம்பிரதாயங்களை நடத்துவார்கள் என்றும்

இந்த நிகழ்வினை கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வான மண்டூக மகரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.