மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு..

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், ‘கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து உருக்கமாக பேசினார். அந்த உரையில், கொரோனா ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவியவர்களையும் குறிப்பிட்டு பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பைக் கொண்டு ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர்.

அதில், மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார்.

இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது.

இந்நிலையில் நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.