ஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..


பொதுமக்களிடம் தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; சட்டசபை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்து வைத்த வாதங்களுக்கு முழுமையான அனுமதி கிடைக்காதது மட்டுமல்ல, உயிரோட்டமான வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், கேள்விகளுக்குரிய நியாயமான பதில்களும் கிடைக்கவில்லை.

ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவதைக் கண்டித்தும் அதனை அவையிலே பதிவு செய்ய வேண்டியது கடமை என்ற உணர்வோடும், தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் வெளிநடப்பு செய்து, ஆரவாரமில்லாத எதிர்ப்பினைப் பதிவு செய்தோம். பின்னர் மீண்டும் அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையினைத் தொடர்ந்து ஆற்றுகிற செயலையும் மேற்கொண்டோம்.

தி.மு.க. வெளிநடப்பு செய்வது மட்டுமே ஊடகங்கள் வாயிலாக வெளியே தெரிகின்றன. எப்போது பார்த்தாலும் இவர்கள் வெளியே வந்துவிடுகிறார்களே, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லையா? என பொதுமக்களிடம் ஒரு தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருக்காலும் நடக்காது என உறுதியாக நம்புகிறேன்.