மருத்துவ மாணவிக்கு மிரட்டல்: பிரபல நடிகையின் மகன் கைது


நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால் திருமங்கலம் போலீஸார் மிதுன் ஸ்ரீநிவாசனைக் கைது செய்தனர்.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இதுகுறித்துக் கூறும்போது, ”நடிகை புவனேஷ்வரியின் மகன் மிதுன் ஸ்ரீநிவாசன் (23), இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வளசரவாக்கத்தில் குடியிருக்கிறார்.
இந்நிலையில் பல்மருத்துவம் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவி தன்னை மிதுன் ஸ்ரீநிவாசன் சமூக வலைதளத்தில் பின் தொடர்ந்ததாகவும் நேரிலும் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் புகார் அளித்தார், இதனால் மிதுனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
மிதுனுக்கு இந்தப் பெண்ணை 9-வது படிப்பதிலிருந்தே தெரியும். அதன் பிறகு சமூக வலைதளத்தில் இந்தப் பெண்ணை பின் தொடர்ந்திருக்கிறார். தொடர்ந்து காதல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அந்தப் பெண்ணும் தொடர்ந்து இவரை தவர்த்து வந்துள்ளார். இதனையடுத்து வெறுப்படைந்த மிதுன் திருமங்கலத்தில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு 2 மாதங்களுக்கு முன்னால் சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.
கல்லூரிக்கும் சென்று மிதுன் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், இவரை செவ்வாயன்று கைது செய்தோம், மேலும் விசாரணை தொடர்கிறது” என்று இன்ஸ்பெக்டர் ரவி தெரிவித்தார்.