“மருத்துவப் படிப்பில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர் பாபு என்பவர் தொடந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீட்டை முறையாக 50% அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்று நீதிபதி நாகேஷ்வர்ராவ் தலைமையிலான அமர்வு இன்று கூறியுள்ளது.

ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி மாணவர் தரப்பில் வாதிட்ட போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு தமிழகம் ஒதுக்கும் இடங்களில் பின்பற்றப்படாததால் பல மாணவர்களுக்கான வாய்ப்புகள் பரிபோவதாகக் வாதாடினார்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குக்கும் இந்த வழக்குக்கும் வேறுபாடு இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றமே வழக்கை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.