மேகதாது விவகாரம்: டிச., 6ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்..

மேகதாது விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள்(டிச., 6) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடுகிறது.

காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது என,

நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இருப்பினும் வரும் 7ம் தேதி அணை கட்டுவது தொடர்பாக சிறப்பு நிபுணர் குழுவின் ஆய்வு நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை மறுநாள்(டிச., 6) தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது.