நடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் : வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை…

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை, ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என நடுத்தர குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில், 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.. அவர் கூறியதாவது:

2018-19ம் நிதி ஆண்டில் தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு இருந்தமுறையே தொடர்கிறது எனத் தெரிவித்தார்.

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வருமானவரி விலக்கு உச்ச வரம்பு என்பது ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. அந்த முறையேஅடுத்த நிதி ஆண்டுக்கும் தொடரும்.

ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் ரூ.10லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் 20 சதவீதம் வரியும், 10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ஆனால், சமீபத்தில் 7-வது ஊதியக்குழுவில் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதால், மக்களின் செலவு செய்யும் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வருமானவரி விலக்கு அளவு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தனர். அவ்வாறு உயர்த்தப்பட்டால், வருமான வரி செலுத்தும் ஏறக்குறைய 75 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். ஆனால், அத்தகைய அறிவிப்பு ஏதுமில்லாததால் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துவிட்டது.