அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்


அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டது கண்டனத்துக்குள்ளானது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எஸ்.வி.சேகர் தலைமறைவாகாமல் சென்னையிலேயே ஹாயாக சுற்றி வருகிறார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்களிடமும் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகர் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் இந்த வி‌ஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்பத்தினருடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அவதூறு வழக்கில் போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரின் இல்ல திருமண நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பொது மக்கள் கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை இழிவாக பேசிய பெண்ணை உடனடியாக கைது செய்த போலீசாரால் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்த போலீசார் எஸ்.வி.சேகரை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் கடுமையாக பாயுமா? அதிகாரம் மிக்கவர்கள் மீது பாயாதா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் காரசாரமாக முன்வைக்கப்படுகிறது. எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சென்னை மாநகர போலீசாரின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் எஸ்.வி. சேகரை கைது செய்யாத போலீசார் அவர் மீது எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன் படி நாளை மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் எழும்பூர் கோர்ட்டில் எஸ்.வி.சேகர் ஆஜராவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.