மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..

18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் 45 வயது நபருடன் சென்று விட்டதாகவும், அவரை மீட்கக் கோரி தந்தை ஒருவர் தாக்கல் செய்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அண்மைக்காலமாக மைனர் பெண்கள் திருமணமானவர்களுடன் ஓடிப்போவது அதிகரித்து வருவது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில், சமூகநலத்துறை செயலரையும், டி.ஜி.பி.யையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மைனர் பெண்கள் ஓடிப் போயுள்ளனர். பள்ளிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன,

இந்த வழக்குகளைக் கையாள தனிப்பிரிவை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.

இது குறித்து நவம்பர் 8 ஆம் தேதி பதிலளிக்குமாறு சமூகநலத்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.