எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..


ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்மீது, மார்ச் 23-ல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, பிப்ரவரி 18 -ம் தேதி நடைபெற்றது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் கலவரம் ஏற்பட்டது. தி.மு.க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி அரசு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. ஆனால், சபாநாயகர் தனபால் நடுநிலையாகச் செயல்படவில்லை என்று தி.மு.க குற்றம் சாட்டியது. மேலும், ‘சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம்’ என்றும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, எடப்பாடி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக் கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் நடந்துகொண்டதாக தி.மு.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 பேரை இதற்காக சஸ்பென்ட் செய்து உத்தரவிட வேண்டும் என தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, சபாநாயகர் மீதான வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென எம்.எல்.ஏ செம்மலை வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 பேர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.