பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்: பிம்ஸ்டெக் நாடுகளுக்கு மோடி வேண்டுகோள்

பயங்கரவாதத்தை ஒழிக்க வங்கக் கடலோர நாடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமைப்பான பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை , பூடான் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளன.பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் இருநாட்கள் மாநாடு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு காத்மண்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காத்மண்டு நகரில் தொடங்கிய மாநாட்டில் 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளுடனான உறவை இந்தியா எப்போதும் போற்றி பாதுகாக்கும் என்றார். பிம்ஸ்டெக் நாடுகள் இடையே வர்த்தகம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்திய உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். பிம்ஸ்டெக் நாடுகளை போலவே தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணிக்காக்கும் என்றும் மோடி தெரிவித்தார். 

இருநாட்கள் நேபாளத்தில் தங்கி இருக்கும் மோடி, மாநாட்டுக்கு இடையில், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா மற்றும் பூடான், மியான்மர் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.மேலும் நேபாளத்தின் பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தர்மசாலாவை நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் இணைந்து திறந்து வைக்கிறார்.

Modi Appeal to BIMSTECH Countries for cooperation in fight against terrorism