கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து அளவளாவினார்.

அப்போது பேசிய பிரதமர், கரும்பு விவசாயிகள் ஒருபோதும், கவலைப்பட கூடாது என்றும், அவர்களின் வாட்டத்தை போக்கும் வகையில், அடுத்த 2 வாரங்களுக்குள் தமது அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும் என்றார். கரும்புக்கு டன் ஒன்றிற்கு, நியாயமான, லாபகரமான, ஆதாரவிலை கிடைக்க வழிவகை செய்யும் விலை உயர்விற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்த விலை உயர்வானது 2017-18ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டதைவிட, பல மடங்கு அதிகமாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விவசாயி ஒருவர், பிரதமருக்கு ஏர்க்கலப்பையை  பரிசாக அளித்தார். பழைய ஜனதா கட்சியின் ஏர்- உழவன் சின்னத்தில் உள்ள கலப்பையின் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த அதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டார்.

Modi Assures Farmers Sugarcane Price will Hike