பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் முதல்வர் நேரில் ஆய்வு…

அக்டோபர் 2வது வாரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு அக்டோபர் 2வது வாரத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் நிலையில், மாமல்லபுரம் நகரம்,

முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி மாமல்லபுரம் முழுவதையும் தூய்மைபடுத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை தலைமை செயலாளர் சண்முகம் 2 முறை ஆய்வு செய்திருந்தார்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடில், முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சீன தூதரக அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கண்காணிப்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம், உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் கடற்கரையோர பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர், இதற்கு மேல் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.