மோடி ஜி… நீங்க கிளம்புற நேரம் வந்தாச்சு…: ட்விட்டரில் ராகுல் கிண்டல்

பிரதமர் மோடி ஜி, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது, மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும்  2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, பிரதமர் மோடி அவர்களை உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) தொடர்பான விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் கடந்த 5 கட்டமாக நடைபெற்ற தேர்தல்களில் முதியோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.