பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி..


வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு நேபாளத் தலைநகர் காட்மண்டுக்கு சென்றடைந்தார்

இந்த மாநாட்டின்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.