எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்து கற்றேன்: ராகுல்

எதைச் செய்யக் கூடாது என்பதை மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:

நிச்சயமாக பிரதமர் மோடியினால் தன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை.  அவரைப் பிரதமராக மக்கள் தேர்வு செய்த போது வேலைவாய்ப்பு, ஊழல்  ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர், ஆனால் இப்போது மக்களுக்கு மயக்கம் கலைந்து விட்டது. பிரதமரே ஊழலில் ஈடுபடுபவர்தான் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர், இந்தத் தோல்விகள் அதன் பலனாக ஏற்பட்டதுதான்.

நான் என் அம்மாவிடம் கூறினேன், 2014 தேர்தல்தான் எனக்கு சிறப்பானது என்றேன். அந்தத் தேர்தலிலிருந்துதான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.  முக்கியமாக பணிவு, அடக்கம் என்பதை நான் கற்றுக் கொண்டேன்.

உள்ளபடியே கூற வேண்டுமெனில் நரேந்திர மோடியிடமிருந்து நிறைய பாடம் கற்றேன். அதாவது எதையெதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

நான் அவருக்கு எதிராக ஆட்சேபணைக்குரிய வார்த்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தவில்லை. நாட்டின் இளைஞர்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டிம் பொருளாதார அமைப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் இவரிடம் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் முடங்கிவிட்டார். எதிர்க்கட்சியினர் கொடுத்த நெருக்கடிக்கு அவரிடம் பதில் இல்லை.

மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.