பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..

40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வர இருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வர இருக்கிறார்.

பின்னர் அந்த இடத்திலிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்ல உள்ளார்.

இந்த விழாவில் மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்த அதி நவீன ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் எழும்பூரை சென்றடையும். ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் ரயிலுக்கான வழக்கமான முன்பதிவு நாளை தொடங்கப்படுகிறது.

ராமேஷ்வரம் – தனுஷ்கோடி இடையே 208 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்பாதை, பாம்பனில் 250 கோடி ரூபாய் செலவில் ரயில் சேவைக்காக புதிய பாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை – ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி நகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.