பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு பற்றி அறிவிப்பார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது..

இந்த நிலையில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே, ஏழை எளியோரின் வாழ்க்கை நிலைமை மோசமடைவதால் சில விலக்குகளை அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் நிலவுகின்றன.

இதுதொடர்பாக, இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார். அப்போது ஊரடங்கை இரு வாரங்கள் நீட்டிப்பதுடன் சில விலக்குகளையும் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உரையின்போது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து டிவிட்டரிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது