ஓய்ந்தது மோடி அலை: ஓங்கியது காங்கிரஸ் “கை”!

 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம், கடந்த 2014 முதல் வீசியதாக கருதப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதையும், காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையுமே இந்த

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காலை முதலே வெளிவரத் தொடங்கின.

மத்தியப் பிரதேசத்தில் எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுக்கும் கடும் பலப் பரீட்சை நிலவி வருகிறது.

மத்தியப் பிரதேசம்

இந்நிலையில், 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிற்பகல் 3 மணிப் பின்னர் வெளியான நிலவரப்படி, பாஜக 115 தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சியமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் பெற வாய்ப்புள்ளது. எனவே, மத்தியப் பிரதேசத்தி்ல் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், மேலும் 10 தொகுதிகளில் பிற கட்சிகள் முன்னிலையில் உள்ளன. பாஜக தனது வழக்கமான குதிரைபேர அரசியல் உத்தியை  பயன்படுத்தி, பிற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்க முயலும். அதனை முறியடித்து ஆட்சியமைக்க வேண்டிய விளிம்பு நிலையில் காங்கிரஸ் உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில், பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. வசுந்தரா ராஜே தலைமையிலான ஆளும் பாஜக அரசு மீது நிலவி வந்த கடும் அதிருப்தியும், காங்கிரசின் தீவிரப் பிரச்சாரமும் அந்த மாநில மக்கள் மனநிலையை மாற்றி உள்ளன. மொத்தம் 200 தொகுதியில் காங்கிரஸ் 102 தொகுதிகளிலும், பாஜக 72 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. எனவே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிய அமையப் போவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸக்கரைப் பொறுத்தவரை ஆளும் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 இடங்களில், 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 15 இடங்களில் மட்டுமே முன்னிலை, 8 இடங்களில் பிற கட்சிகள் வெற்றி முகத்தில் உள்ளன. எனவே, சத்தீஸ்கரைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

மிசோரம்

மிசோரத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையுமே பின்னுக்கு தள்ளிவிட்டு, மிசோ தேசிய முன்னணி கட்சி முன்னிலையில் உள்ளது. மொத்தம் 40 இடங்களில் மிசோ தேசிய முன்னணிக் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், மேலும் 5 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள இடங்களில் பிற கட்சிகள் முன்னிலையில் உள்ளன. மிசோரத்தைப் பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணிக் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானாவில், சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சி, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மொத்தம் 119 இடங்களில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 70 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அங்கு, சந்திர சேகர ராவ் மீண்டும் முதல்வராவது உறுதியாகி விட்டது.

 

   – புவனன்