பிரதமர் ஆவதற்காக எதையும் செய்வார் மோடி: திமுக தலைவர் ஸ்டாலின்

பிரதமராவதற்காக மோடி எதையும் செய்யத் தயாராகிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:

பிரதமர் ஆவதற்காக மோடி எதையும் செய்வார். அதனால் எதுவும் நடக்கும்.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு உருட்டி மிரட்டி எப்படி பணிய வைக்கிறார்களோ, அதேபோல தற்போது தேர்தல் ஆணையத்தையும் உருட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள்.

நியமாக பார்த்தால் தேனி நாடாளுமன்றத் தேர்தலை தான் நிறுத்தி இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் கோடி கோடியாய் பணத்தை கொட்டினாலும் ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தாலும் மக்கள் மாநில அரசையும் மத்திய அரசையும் அப்புறப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளனர். தேர்தலில் அவர்களின் பாச்சா பலிக்காது.

இந்த தேர்தல் புதுமையாக அமையப்போகிறது. பணத்திற்கு மயங்காத வளையாத தேர்தலாக இது இருக்கும்.

வேலூர் தேர்தலை ரத்து செய்த பின்னர், திமுகவை அச்சுறுத்துவதற்காகவே கனிமொழி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.  இதன் மூலம் வேட்பாளர்கள் பயந்துவிடுவார்கள்,  பூத் ஏஜெண்டுகள் வேலை செய்ய பயப்படுவார்கள் என்றெல்லாம் நினைக்கின்றனர்.

குடியரசுத் தலைவரே  கையொப்பமிட்ட பிறகு இதில் வேறு ஏதும் பரிகாரம் கிடைக்காது. இருந்தாலும் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை திமுக செய்யும்.

முதலில் பலமாக இருக்க பணம் கொடுத்ததாக பொழுது ஊரை ஏமாற்றும் அறிக்கை பழம் வாங்கி காசை எதற்காக ரகசியமாக கொடுக்க வேண்டும்?

வரும் காலத்தில் தேர்தல் ஆணையத்தை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையே தற்போதைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.