முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 11ந் தேதி பேச்சுவார்த்தை..


முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும், அடுத்த மாதம் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிராக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர்கள், முல்லைப்பெரியாறு அணையில் வாகனம் நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இருமாநில முதலமைச்சர்களும் டிசம்பர் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.