மும்பை தாக்குதலுக்கு காரணம் பாக்., தீவிரவாதிகள் : இம்ரான் கான் ஒப்புதல்..

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என எமது அரசு விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் பாகிஸ்தான் நலனும் அடங்கி உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்த விவரங்களை கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் குறித்து 2 நாட்களுக்கு முன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது எங்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரியும்.

அதை அவர்களே ஒத்துக் கொள்வது நல்லது. இந்த வழக்கில் நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அரசு கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும் என பாகிஸ்தானை மறைமுகமாக சாடி இருந்தார்.

இந்நிலையில் பாக்., பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.