மும்பையில் பயங்கர தீ விபத்து : பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு


மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ளது கமலா மில்ஸ். சேனாபதி மார்க் பகுதியில் அமைந்த இந்த மில்லின் 3-வது மாடியில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 6-க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகி 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டடத்தில் மும்பையில் செயல்படும் பல டைம்ஸ் நவ், டி.வி. 9, ரேடியோ மிர்ச்சி, ரெஸ்டாரெண்ட், பப், உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த கட்டடம் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.