முத்தலாக் தடை மசோதா மீது, மாநிலங்களவையில் இன்று விவாதம்

முத்தலாக் தடைச் சட்ட மசோதா  மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை மேற்கொள்ளும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா,

கடந்த 17ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில்,மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

இந்த மசோதாவை எதிர்க்கப்போவதாக அதிமுக, தெலுங்குதேசம், திமுக, காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகும்படி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

தற்போது மாநிலங்களவையில் ஆளும் பாஜக தலைமையிலான அணிக்கு 93 உறுப்பினர்களே ஆதரவாக உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர்

இதர கட்சிகளின் உறுப்பினர்கள் 39. ஓரிடம் காலியாக உள்ளது.

இதனிடையே, கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,தற்போதுள்ள வடிவில் மசோதாவை நிறைவேற்ற விடப் போவதில்லை என்றும்,

தேர்வுக் குழுவுக்கு மசோதாவை அனுப்புவதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மாநிலங்களவையில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து முடிவு செய்வதற்காக,

இன்று காலை எம்.பி.க்களின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் அழைப்பு விடுத்துள்ளார்.