மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..


கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக வங்கதேசத்தில் 720,000 மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த பெரும் நெருக்கடி உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தாரஸ், ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்த சூழலை கடந்த ஆண்டின் மிக மோசமான மனித உரிமை நெருக்கடி என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வங்கதேச ரோஹிங்கியா அகதி முகாம்களை பார்வையிட்ட போது பயங்கரமான துன்புறுத்தல் கதைகளை கேட்டதாக நினைவுக்கூர்ந்துள்ள குத்தாரஸ், “ எப்படி தன் மகன் தன் முன்பே கொல்லப்பட்டார் என்பதை சொல்லும் போது ஒரு தந்தை நிலைக்குலைந்து போனார்.

அவர் அம்மா கொடூரமாக கொல்லப்பட்டு, அவரின் வீடு தீக்கரையாக்கப்பட்டது என்றார். பாலியல் வன்புணர்வு காரணமாக உண்டான ஒரு சிறிய குழந்தையை கலக்கத்தோடு ஏந்தியிருந்த ஒரு பெண், “எங்களுக்கு மியான்மரில் பாதுகாப்பு வேண்டும், குடியுரிமை வேண்டும். எங்கள் சகோதரிகள், பெண் குழந்தைகள், தாய்மார்கள் பட்ட துன்பங்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரினார்”.

கடந்த ஆகஸ்ட் 2017யில் அராக்கன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி என்ற ஆயுதக்குழு மியான்மர் பாதுகாப்பு அரண்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரோஹிங்கியா பகுதிகளை கடுமையாக தாக்கத் தொடங்கியது மியான்மர் ராணுவம். ராணுவத்துடன் புத்த பேரினவாதிகளும் மியான்மரின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் இணைந்து கொண்டு ரோஹிங்கியா மக்களை கொல்லவும் துன்புறுத்தவும் துரத்தவும் செய்தனர். இதனால் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.நா. அறிக்கையில் மியான்மர் அதிகாரிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ சிறப்பு தீர்ப்பாயத்துக்கோ பரிந்துரைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம், இந்த பெரும் நெருக்கடியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.