நாம் தமிழர் கட்சி சின்னத்தை வெளியிட்டார் சீமான்; 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை வெளியிட்டார் சீமான். மேலும் 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்த நிலையில், அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது.

அதில் பங்கேற்ற சீமான் கூறியதாவது: ”மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும். இந்தத் தேர்தலில் நமக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். வரும் 23-ம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்” என்றார் சீமான்.

முன்னதாக, கடந்த தேர்தல்களில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.