நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..


சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது.

அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்..

கதைக்கரு
ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

படம் பற்றி ஒரு பார்வை

கீர்த்தி சுரேஷ் படத்தின் மிக முக்கிய கேரக்டர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த இவர் ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

சாவித்திரி சாதாரணமானவர் அல்ல. சகாப்தம் படைத்தவர். அப்படியான ஒருவராக இப்படத்தில் தன்னையே மாற்றியிருக்கிறார். ஏற்கனவே படங்களில் கீர்த்தி சுரேஷின் சில ரியாக்சனை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால் இப்படத்தின் மூலம் அவருக்கு அந்த நிலை மாறலாம். இனிவரும் காலத்தில் இதே பெயர் அவருக்கு பொருந்தினாலும் ஆட்சேபனையில்லை என சொல்லலாம்.

ஜெமினி கணேசனாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். இவருடன் கீர்த்திக்கும் காதல் மலர்கிறது. ஒரு நடிகரின் மேனரிசத்தை உள்வாங்கி அதை பிரதிபலிப்பது சாதாரணமான விசயமல்ல.

அவ்வகையில் துல்கர் தைரியமாக இறங்கியிருக்கிறார். மேலும் ஒரு தமிழ் படத்திற்காக அவர் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் முழுமையான ஜெமினி கணேசனாக எல்லாரிடமும் இடம் பெற்றாரா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். சில அம்சங்கள் குறைந்து போல இருந்தது.

ஆனால் குடிப்பது போன்ற காட்சியில் கீர்த்தியுடன் இவர் பேசும் போது பார் (மதுக்கடை) பற்றி ரைமிங்காக ஒரு டையலாக் சொல்வார். அதற்கு நல்ல ரீச் இருந்தது.

நடிகை சமந்தா மதுரவாணியாக ஒரு பெண் பத்திரிக்கையாளராக வந்திருக்கிறார். சாவித்திரியை பற்றி விசயங்கள் பெரிதளவில் தெரியாவிட்டாலும் பின் தன் ஆராய்ச்சியால் ரசிகையாக மாறிப்போகிறார்.

இவருக்கும் விஜய் அந்தோனியாக வரும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையில் காதல் ஓடுகிறது. கலாச்சாரம் ஜெயித்ததா, காதல் வென்றதா என்பது ரகசியம் (படத்தில் பாருங்க).

மேலும் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பானுமதி ஆகியோரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக மாறி இடம் பிடித்திருக்கிறார்கள்.

படத்திற்கான காட்சிகள் அக்காலம் போல அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் வரிகள் என மனதோடு ஒன்றிவிடுகிறது.

ப்ளஸ்

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறிய தைரியத்தை பாராட்டலாம்.

அக்கால காதலை இக்கால தலைமுறைக்கு இயல்பாக எடுத்து சொன்னவிதம் நன்று.

வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாக கொடுத்த இயக்குனரின் அழகான முயற்சி.

நிறைவான காட்சிகளால் சிலிர்ப்புடன் வரும் சிரிப்பு.

மைனஸ்

சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் வழக்கமான அசைவுகள் ஃபிளாஷாக தெரிந்தது.

டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என தோன்றவைத்தது.

மொத்தத்தில் களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.