நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார், …..

நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையொட்டி நடந்த பூமிபூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் செளபே ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.

பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் கொடுத்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

தமிழகத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைப்பதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் கோதாவரி – காவேரி ஆறு இணைப்பு திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும், சேலம் நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாறு சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தில் ரூபாய் 1167.21 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூபாய் 34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசு கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

33 ஆயிரத்து141 பயனாளிகளுக்கு ரூபாய் 134.37 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கரூரில் ரூபாய் 156 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

காந்திகிராமம் பகுதியில் ரூபாய் 270 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவக்கல்லூரி கடந்த 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று இன்று கரூரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்பு மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்..