நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத் தாளில் பிழைகளுடன் இடம்பெற்ற 49 கேள்விகள்: மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரிக்கை..


நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் தவறான மொழிப்பெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ் மொழியில் மட்டும் 24,720 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மொழி யில் கேட்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் தவறான மொழிப் பெயர்ப்பு மற் றும் பிழைகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வுக்கான புதிய செயலி தொடங்கிய டெக் ஃபார் ஆல் அறக்கட்டளை நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் நேற்று சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் வினாத்தாளில் இடம் பெற்றிருந்த 49 கேள்விகள் தவறான மொழிப் பெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் உள்ளது.

உதாரணத்துக்கு செங்குத்து என்பதற்கு நேர்குத்து, சிறுத்தை யின் என்பதற்கு சீத்தாவின், சிறு நீர் நாளம் என்பதற்கு யூரேட்டர், இயல்பு மாற்றம் என்பதற்கு இயல் மாற்றம், தாவரங்கள் என்பதற்கு பிளாண்டே, பழுப்பு என்பதற்கு பழப்பு, இறுதி நிலை என்பதற்கு கடைநிலை என்று கேள்விகளில் இடம்பெற்றுள்ளன.

தேவையான நடவடிக்கை

நீட் தேர்வு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 49 கேள்விகள் பிழைகளுடன் இடம்பெற்றிருப்பதால், அந்த 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண்களை வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் மற்றும் சிபிஎஸ்இ கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்.

என்சிஆர்டி புத்தகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அதனால்தான் மொழிப்பெயர்ப்பு செய்வதில் சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது. தமிழ் மொழியில் என்சிஆர்டி புத்தகங்களை வெளியிட வேண்டும். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற பிழைகள் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.பி.ராம்பிர காஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுபற்றி எந்த கருத்தையும் கூற முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.