நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு : மு.க. ஸ்டாலின் இரங்கல்..

நெல் ஜெயரமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு என திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து, அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயத்தில் ஆர்வம் காட்டும்
இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் சென்றவர்களில் மிக மிக முக்கியமானவர் நெல் ஜெயராமன்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாய பெருமக்கள்,
சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனின் உடலுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு என கூறினார்.

பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார்.

நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள்,

இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.