நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு: பலர் படுகாயம்…

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதாகவும்  பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“ஒரு ஆள் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்தார்.

24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.