புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க ஜெ., தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி நஷ்டம்…


புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ 14 கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல் பின்வருமாறு.

2012 முதல் 2016 ஆண்டுவரை4,606 பேருந்து அடிசட்டகம் வாங்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் மற்றும் டாட்டா மோட்டர்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிடத்திலிருந்து இந்த அடிசட்டகம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த அடிச்சட்டகத்தை வைத்து புதிய பேருந்து உருவாக்க தேவைப்படும்பாகத்தை வாங்கி பேருந்தை உருவாக்கும் வேலையை அரசு செய்யலாம். அல்லது அதை வேறு தனியார் நிறுவனங்களும் செய்யலாம்.

இதன்படி, 2,020 அடிசட்டகத்தை பயன்படுத்தி புதிய பேருந்து உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிடப்பில் போட்டதால் ரூ. 10.29 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

புதிய பேருந்துகள் தாமதம் காரணமாக எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பேருந்துகள் குறித்த காலத்துக்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தான் புதிய பேருந்துகள் திறப்பு விழா நடைபெறும். இந்நிலையில் அவர் கொடியசைத்து திறந்து வைக்க தேதி ஒதுக்காததால் இந்தக்ஷ் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.