வரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..


தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வரும் 6-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். அதே நேரத்தில் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் அடுத்த இரு நாட்களுக்கு உறைபனி நிலவக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணபப்டும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வரும் 6-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.