ஆர்கே நகர் வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை: பணப்பட்டுவாடாவைத் தடுக்க புது டெக்னிக்காம்!

ஆர்கே நகரில் வசிப்போரின் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என சென்னை மாநகர ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், வெள்ளிக்கிழமை மாலை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனர். டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்து துணை ஆணையர் உமேஷ் சின்ஹா காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன் கூறியதாவது: 

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வாகன சோதனை, சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். கடந்த முறை வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்.க நேகருக்குள் வாகனங்களுடன் வந்து பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது .இதனைத் தடுக்கும் வகையில், ஆர்கே நகர் வாசிகளின் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து ஆர்கே நகருக்குள் வாகனங்கள் நுழைவது தடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

 

முன்னதாக, வெள்ளிக்கிழமை முற்பகலில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் முருகேசன், தண்டையார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்காளர் பதிவு அலுவலராக தண்டையார் பேட்டை மண்டல அலுவலர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம், தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

New restrictions for RK Nagar By Election