நியூசிலாந்துக்கு எதிரான 3 -வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி…

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2–வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–நியூசிலாந்து மோதும் 3–வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடந்தது.

பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கச்சிதமாக செயல்பட்டு முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வெல்ல தீவிரம் காட்டியது.

அதற்கு பலனும் கிடைத்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.

இதனால் இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சமியும், பாண்ட்யாவும் நியூசிலாந்து ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி பேட்டிங்கிலும் அசத்தியது. நியூசிலாந்து அணியின் இலக்கை 43 ஓவரிலேயே இந்தியா தகர்த்தது.

இந்திய அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் வலுவான அடிப்படையை இந்தியாவிற்கு அமைக்க முயற்சி செய்தனர்.

இந்தியா 8.2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. தவான் 28 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய கோலி, ரோகித் ஷர்மாவுடன் சிறப்பாக விளையாடினார்.

ரோகித் ஷர்மா 62 ரன்களுடனும், கோலி 60 ரன்களுடனும் அவுட் ஆனார்கள். இறுதியில் ராய்டு 40 ரன்களுடனும், கார்த்திக் 38 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.