நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..


பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பண மோசடி விவகாரம் தொடர்பாக இண்டர்போலிடம் மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இண்டர்போல் நிரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்குமாறு தனது உறுப்பு நாடுகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. பல கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி, இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக ஏற்கனவே ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28ஆம் தேதி, பல்வேறு நாடுகளிடம் நிரவ் மோடி உள்ளே நுழைய அனுமதி மறுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும் பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளிடம் நிரவ் மோடியின் நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கூறியது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்சி ஆகியோர், வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.