பத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை : இந்து ராம்

தன்னுடைய பத்திரிகைத் தர்மத்துக்கு நிர்மலா சீதாராமன் சான்றிதழ் தரத் தேவையில்லை என இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார்.

ரபேல் உடன்படிக்கையில் பிரதமரின் தலையீடு இருந்ததாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதன் அடிப்படையில் அனில் அம்பானி முப்பதாயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இந்து நாளிதழ் ஆசிரியர் ராம்,

மனோகர் பாரிக்கரின் பங்கு குறித்துத் தனியாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் அலுவலகமும் பிரெஞ்சு அதிபர் அலுவலகமும் இதைக் கண்காணிப்பதாக மனோகர் பாரிக்கர் கூறவில்லை என்றும், பாதுகாப்புத் துறையை மீறிப் பிரதமர் அலுவலகம் பேச்சு நடத்தியதையே இது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்திரிகைத் தர்மம் குறித்து நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை என்றும் ராம் தெரிவித்தார். பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டவர்கள் அதை மூடி மறைக்கப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரபேல் உடன்பாட்டில் தொடர்பில்லாத நிர்மலா சீதாராமன், அதை நியாயப்படுத்தும் பொறுப்பை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராம் வினா எழுப்பினார்.