தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு ..

தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமித்ஷா வெளியில் வராமல் இருந்தார். அவர் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை, வெண்டிலேட்டர் வசதி போதிய அளவில் இல்லை, பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் தீரவில்லை,

இதை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருக்கிறார் என்றெல்லாம் செய்திகளும், தகவல்களும் பரவி வந்தன.

மேலும் அமித்ஷாவின் உடல்நிலை தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். தாம் நலமுடன் இருப்பதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற தகவல்களை நான் கண்டுக்கொள்வதில்லை.

நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியில் இருக்கட்டும் என்று நான் கருதினேன்.

எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், கடந்த இரு தினங்களாக எனது கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர்.

அதனை நான் ஒதுக்கிவிட முடியாது. அதனால், இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன். நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன். எந்த நோயும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.