மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..


மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, , அதிமுக அரசைப்போல், வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதில்லை எனக் கூறினார். மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திமுக, தமிழக நலனுக்கான எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றியதில்லை என்றும் அவர் சாடினார்.

மத்திய அரசிடம் தமிழக அரசு அடிபணிந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர், இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தால் மட்டும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதமலைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி, ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 7ஆயிரத்து 70 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.