நவ.12 முதல் டிச.7 வரை 5 மாநிலத் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை..

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12-ம் தேதியும், 20-ம் தேதியும் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதேபோல, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28-ம் தேதி வாக்குப் பதிவும், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி அதாவது இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(ஏ)ன்படி,

நவம்பர் 7-ம் தேதி காலை 7 மணி முதல் 2018, டிசம்பர் 7-ம் தேதி மாலை 5.30 மணிவரை 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக எந்தவிதமான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 126(1)(பி)ன்படி, தேர்தல் தொடர்பாக எந்தவிதமான காட்சிகளையும் வெளிப்படுத்துவது அதாவது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகளை ஒளிபரப்புவது, ஆய்வுகளை சேனல்களில் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.