ஒகி புயல் பாதிப்பு : 2வது நாளாக இருளில் மூழ்கிய குமரி மாவட்டம்..


ஒகி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 2வது நாளாக இருளில் மூழ்கியுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மூவாயிரத்து 500க்கும் அதிகமான மின்கம்பங்கள் கனமழையாலும் பலத்த  காற்றாலும் சாய்ந்துள்ளன.  25 மின்மாற்றிகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மின் தடையால் மின்மோட்டார்கள் இயக்கப்பட முடியாமல், குடிநீருக்கு ஆழ்துளை கிணறுகளை நம்பி இருப்பவர்கள் தவித்து வருகின்றனர். ஜெனரேட்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடும் தனிநபர்கள் விலையை இரு மடங்கு உயர்த்தியுள்னர். மின் தடையை சீரமைக்க வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட இரண்டாயிரத்து 500 மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மின்சாரம் கிடைக்க முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது.