ஓசூர் இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு

அமமுக சார்பில் ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் தமிழ்மாறன் போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது தவிர அமமுக சார்பில் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளரான ஞான அருள்மணிக்கு பதில் புதிய வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் அமமுக தனித்து போட்டியிடுகிறது.

தினகரனின் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள எஸ்டிபிஐ-க்கு மத்திய சென்னை மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்களை 2 கட்டங்களாக தினகரன் வெளியிட்டார்.

அப்போது ஓசூர் சட்டசபை மற்றும் புதுவை எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தினகரன்,

ஒசூர் தொகுதியில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்தார்.

அது போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறி அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.