பாக்., அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் டெல்லியில் ரூ.900க்கு விற்பனை..


பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் ஆனந்த் விகார் பகுதியில் காஷித் என்பவனிடம் 330 போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த டெல்லி சிறப்பு போலீசார், அவனை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தானியர் சிலர் போலி ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசுவார்கள், அதற்கு பதிலாக தாங்கள் நல்ல ரூபாய் நோட்டுகளை வழங்குவோம் என்று கூறியுள்ள அவன், 100 ரூபாய் போலி நோட்டுக்கு 30 ரூபாய் வீதம் வழங்குவதாகவும் தெரிவித்தான்.
இவ்வாறு பெறப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விநியோகிப்பதாகவும், இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இதையடுத்து, மேற்கு வங்கத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், மேலும் 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.