உள்ளாட்சி தேர்தல் : வாக்குச்சீட்டுகளின் வண்ணங்கள், வாக்குப்பதிவு நேரம் அறிவிப்பு …

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் என்று அதில் குறிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீண்டகாலமாக தள்ளி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வண்ணங்கள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை குறித்து அரசிதழில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எஸ்.பழனிசாமியின் உத்தரவு வருமாறு:-

ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடக்கும் உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

அதன்படி, தேர்தல் நாளன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஊராட்சிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டின் வண்ணமும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவின் போது வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டும்,

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் பிங்க் வண்ண வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குப் பதிவில் பச்சை நிற வாக்குச்சீட்டும்,

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மஞ்சள் நிற வாக்குச் சீட்டும் பயன் படுத்தப்படும்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 9 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்ற வகையில் அச்சிடப்படும்.

கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதற்கேற்றபடி கூடுதல் எண்ணிக்கையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட வேண்டும்.

தமிழ் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்படும். அவரது பெயருக்கு அருகே தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது