உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டல்..


காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முதல்-மந்திரியாக இருக்கிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்மல்குமார்சிங் துணை முதல்வராக உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சி செய்தது. ஆனால் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து தேர்தலை சீர்குலைத்தனர்.

தேர்தலில் போட்டியிட்ட சிலரை சுட்டுக்கொன்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீரில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

இதையறிந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த தேர்தலையும் சீர் குலைக்க அவர்கள் இப்போதே அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காஷ்மீரில் அரசியல் கட்சிகள் பிரமுகர்களிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.